
ஈப்போ,ஜன24:
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்,கவலை உனக்கில்லை ஒப்புக் கொள் என்பது போல் கைத்திறன் கல்வியில் திறன் மிக்கவர்களாகவும் ஆளுமை கொண்டவர்களாகவும் மலேசியர்கள் உருவெடுக்கும் போது அவர்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை என்பது விரிவடைகிறது.
உள்நாடு மற்றும் இன்றி கைத்திறன் கல்வியில் சிறந்த நிலையை கொண்டிருப்பவர்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை உலகளாவிய நிலையில் வாய்ப்பினை ஏற்படுத்தும் சாத்தியத்தை கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் பிரதமர் துறையின் சட்டத்துறை துணை அமைச்சர் மு.குலசேகரன் தெரிவித்தார்.
அரசாங்கம் அதற்கான வாய்ப்பையும் சூழலையும் நாட்டில் விரிவடையச் செய்துள்ள நிலையில் அத்துறை சார்ந்து மலேசியர்களின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.குறிப்பாக இந்தியர்களின் கவனம் இத்துறை சார்ந்தும் அதன் கல்வி சார்ந்தும் திரும்ப வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஈப்போ மேருவில் அனைத்துலக நிலையில் அனைத்துலக கைத்திறன் கல்வி நிலையத்திற்கும் (ITA) சீனாவின் வூவ்யாங் Kolej Yueyang,China) கல்லூரிக்குமான இடையிலான கையெழுத்து ஒப்பந்தத்திற்கு தலைமையேற்ற பின்னர் துணை அமைச்சர் இதனை தெரிவித்தார்.உலகளாவிய நிலையில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் தருவாயில் நாம் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
மேலும்,இவ்விரு கல்லூரிகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் நாட்டில் தொழில்திறன் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு,இத்துறை சார்ந்த கல்வி மேன்மேலும் விரிவடைந்தும் அதற்கான வாய்ப்புகளை அனைத்துலக ரீதியில் விரிவடையவும் செய்வதை சுட்டிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் பிற இனத்தவர்கள் இத்துறையின் முக்கியத்துவம் அறிந்து செயல்படும் நிலையில் இந்தியர்களும் இந்திய இளைஞர்களும் தங்களின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்ய இத்துறையில் கவனம் கொள்ள வேண்டும்.கல்வியை தொடர முடியாதவர்களும் வேலை செய்து கொண்டிருப்பவர்களும் மட்டுமின்றி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் இக்கல்வியில் பயிற்சி பெற்று தகுதியான சான்றிதழுடன் பயணிக்கும் போது வாய்ப்புகளும் தகுதிகளும் சிறந்த நிலையை உருவாக்கும் என்றார்.
உலகம் தற்போது 4.0 தொழிற்புரட்சியில் சுழன்றுக் கொண்டிருக்கும் போது நாம் அதுசார்ந்த துறைகளில் நமக்கான தகுதியை வளர்த்து கொண்டு பீடு நடை போட வேண்டும்.சூழலுக்கு ஏற்றவாறு நாம் நம்மை தகுதி உருமாற்றம் செய்து கொள்ளாவிட்டால் உலக வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பின் தங்கிவிடுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே,தொழில்திறன் கல்வியில் வாய்ப்புகளு,ம் நம்பிக்கையான எதிர்காலமும் இருக்கும் பட்சத்தில் அதன் வாயிலாக நல்லதொரு எதிர்காலத்தையும் வளமான வாழ்வையும் அமைத்து கொள்வதில் மலேசியர்களின் சிந்தனையும் ஆக்கமும் இருக்க வேண்டும் எனவும் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி,நாட்டில் தொழில்திறன் கல்விக்கு அரசாங்கம் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் நிலையில் நிறைய தொழில்திறன் கல்லூரிகளும் சிறப்பாக இயங்கி வரும் வேளையில் அத்துறையில் தனித்துவமாய் ஆளுமை செலுத்திட இந்தியர்கள் முன் வரவேண்டும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

