
ஈப்போ, ஜன. 24:
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து காலை மணி 6.00 க்கு கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு புறப்பட்டது என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா.சீத்தா இராமன் கூறினார்.
முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கம் முடிந்தவுடன் ரதம் நகர தொடங்கி விட்டது. அதன் பின், ஜாலான் சுங்கை பாரி, ஜாலான் துன் பேராக்,ஜாலான் லகாட், லிட்டல் இந்தியா, ஜாலான் சுல்தான் யுசோப், வாலகோட் வளாகம், ஈப்போ மருத்துவமனை சாலை வட்டம், தாமான் டாக்டர் சீனிவாசகம் மற்றும் இறுதியாக கல்லுமலையை வந்தடையும். இதன் மொத்த நீளம் 4.8 கிலோ மீட்டர் என்று அவர் குறிப்பிட்டார்.
வேலை நாளாக இருந்த போதும் பக்தர்களின் கூட்டம் புந்தோங் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிறைந்து விட்டனர். இருப்பினும், சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போலீஸ் தரப்பினரின் ஆலோசனையை பின்பற்றி செயல்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த இரத ஊர்வலத்தில் சாலை நெடுகிலும் இரு பக்கங்களிலும் பொதுமக்கள் மற்றும் தனிநபர்கள் நீர் ஆகாரங்கள், காலையுணவு போன்றவற்றை தயாரித்து வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் ஆலய சார்பில் நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.
ஆனால், பொதுமக்கள் தயவு கூர்ந்து குப்பைகளை தயார் செய்து வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போடவும். ஈப்போ மாநகர் மன்றம் இந்த தைப்பூச காலகட்டத்தில் சாலைகள் மற்றும் கோவில் வளாகத்தில் குப்பைத் தொட்டிகள் தயார் செய்து வைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் போலீஸ் தரப்பினர் மற்றும் ஈப்போ நகராண்மை கழகத்தின் பணியாளர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின் றனர். அவர்களின் நடவடிக்கையால் சாலை போக்குவரத்து நெரிசல் பிரச்சினை சுமூகமாக தீர்வு கணப்பட்டது என்று அவர் பாராட்டினார்.
காலை 6.00 மணிக்கு புந்தோங் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இரத ஊர்வலம் காலை மணி 10.40 க்கு கல்லுமலை ஆலயத்தை வந்தடைந்தது என்று இரா.சீத்தா இராமன் கூறினார்.

