
மித்ராவின் உதவிகள் மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு கிடைக்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் கோரிக்கையை முன் வைத்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு மித்ரா மூலம் எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை.
2018 ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் மித்ரா மூலம் மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு உதவிகள் கிடைத்தன.
ஆனால் இப்போது எந்தவொரு மானியம் மற்றும் உதவிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.
ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் இப்போது மித்ரா செயல்படுகிறது.
மலேசிய தெலுங்கு சங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள மித்ராவின் உதவிகள் தேவை.
ஆகவே ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி நேரடி பார்வைக்கு இந்த கோரிக்கையை முன் வைப்பதாக அவர் சொன்னார்.
நேற்று சுபாங் ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் 68 ஆம் ஆண்டு கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விழாவில் உரையாற்றிய துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி , ஒற்றுமை துறை அமைச்சின் பார்வையில் மித்ரா செயல் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் வேளையில் அரசு சார்பற்ற இயக்கங்களுடன் மறுபடியும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

