

செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 21-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நடப்பு அரசுக்கு மைபிபிபி கட்சி முழு ஆதரவை வழங்கும் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று அறிவித்தார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மைபிபிபி கட்சிக்கு 12 கிளைகள் உள்ளன.
தொகுதி தலைவராக ஜெகதீசன் இருக்கிறார். அந்த வகையில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவோம் என்றார் அவர்.
இதனிடையே வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மைபிபிபி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த மாநாடு நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த மாநாட்டில் 3,000 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
இன்று மைபிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு பிறகு ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன், இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன், சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட அனைத்து உச்சமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

