
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 29-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் PH வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்ய தவறினால் URIMAI கட்சியின் தலைவர் பேராசிரியர் P. இராமசாமி இங்குள்ள மக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ இரமணனின் கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று பகான் டாலாம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சதீஷ் முனியாண்டி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 11 மே 2024 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில். PH-DAP வேட்பாளர் தோற்றால், கோலா குபு பாருவில் எந்த வளர்ச்சியும் இருக்காது என்று இரமணன், ஏற்கனவே முடிவுகளை அறிந்தவர் போல், வாக்காளர்களை பயமுறுத்தத் தொடங்கியுள்ளார் என்றார் அவர்.
URIMAI கட்சித் தலைவர்கள் இப்போது கோலகுபு பாருவில் இறங்கியுள்ளனர்.
கோலா குபு பாருவில், குறிப்பாக இந்திய சமூகத்தினரிடையே உள்ள உணர்வை நாம் உணரலாம்.
இந்திய சமூகத்தை அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் தரப்பால் இந்திய சமூகம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.
குறிப்பாக இன்று அமைச்சரவையில் இந்திய சமூகத்திற்கு குரல் கொடுக்க தமிழ் அமைச்சர் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. இந்திய சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பு ஏற்பார்களா என்று அவர் சவால் விடுத்தார்.

