
ஈப்போ, ஜுன்.22: நேற்று முன்தினம் இரவில் இங்குள்ள ஸ்டேஷன் 18 வளாகத்தை பேராக் சுகாதார இலாகாவுடன், போலீஸ் தரப்பினர், பேராக் மனிதவள இலாகா, ஈப்போ மாநகர் அமலாக்க அதிகாரிகள் ஆகியோருடன் ஒன்றிணைந்து 24 மணி நேர உணவகங்களின் சுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிரடி பரிசோதனை மேற்கொண்டதாக பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்த அதிரடி பரிசோதனையில் ஒரு 24 மணி நேர உணவகம் அசுத்தமாக இருந்ததாலும் , தொழிலாளர்கள் பாதுகாப்பு போன்ற குறைபாடுகள் இருந்தன. இதன் அடிப்படையில் அந்த உணவகம் சீல் வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இந்த 24 மணி நேர உணவகத்தால் அதிகமானோர் உடல் பருமன் மற்றும் உடல் உபாதைகள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டனர். அத்துடன், இம்மாதிரியான அசுத்தமான உணவகங்கள் செயல்படுவதால் பயனீட்டாளர்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்ககூடும் என்று அவர் வருத்தமாக தெரிவித்தார்.
இந்த பரிசோதனையில் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 12 மணி ்நேரம் தங்கள் பணியை செய்து வருவதாக அறியப்படுகிறது. இவர்கள் தங்கியுள்ள மற்றும் தூங்கும் இடமும் அசுத்தமாகவே உள்ளது. அத்துடன், அந்நிய நாட்டு தொழிலாளர்களான இவர்களிடம் முறையான ஆவணங்களும் இல்லை என்று மனவேதனையுடன் கூறினார்.
இம்மாதிரியான அதிரடி பரிசோதனைகள் பேராக் மாநிலம் முழுவதும் உணவகங்களில் மிக விரைவில் மேற்கொள்ளப்படும். பயனீட்டாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட உணவுகளை உணவகங்கள் தயார் செய்வதில் முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

