
மாலிம் நவார்,ஜூலை04: மம்பாங் டிஅவான் சீன புதுக்கிராமங்களுக்கான நிலப்பட்டா உரிமை நீடிப்பது குறித்த நடவடிக்கையில் மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி களமிறங்கினார்.அதுகுறித்த விளக்கக்கூட்டம் அண்மையில் அவரது சேவை மையத்தில் நடந்தேறியது.
நிலப்பட்டா உரிமையை நீடிப்பது குறித்தும் அதற்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு இணங்க கம்பார் மாவட்ட நில அலுவலகத்தின் அதிகாரிகள் பொது மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மம்பாங் டிஅவான் மட்டுமின்றி மாலிம் நவார் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிலப்பிரச்னைகளுக்கும் தீர்வு மற்றும் அதுகுறித்த விளக்கம் பெற இந்த விளக்கக்கூட்டம் மிக பயனான ஒன்றாக அமைந்ததாக கூறிய சட்டமன்ற உறுப்பினர் நிலப்பட்டா உரிமை நீடிப்பதற்கான கட்டணம் குறித்தும் கலந்து கொண்ட சுமார் 180 பேருக்கு தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும்,இந்த நிலப்பட்டா உரிமை நீடிப்பு விவகாரம் தொடர்பில் வரும் ஜூலை 12ஆம் தேதி கம்போங் மாலிம் நவார் சமூக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றுமொரு விளக்கக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் கூறிய பவானி இந்த நிலப்பட்டா உரிமை நீடிப்பு நடவடிக்கையில் மக்களின் சுமையை குறைக்க 80 விழுகாடு வரையிலான கட்டண கழிவையும் மடானி அரசாங்கம் வழங்கி முன் வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
இது மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதோடு மக்களின் மடானி அரசாங்கம் வழங்கிடும் முன்னுரிமையின் சான்று எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,இந்த நிலவிவகாரப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும் நடவடிக்கை எடுக்கவும் தாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் கம்பார் மாவட்ட நில அலுவலகம் நிறைவான பங்களிப்பை வழங்கி வருவது பெருமிதமாக இருப்பதாகவும் கூறினார்.

