
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை பூலோ ஜூலை 14-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் பூச்சோங் 14 தமிழ்ப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
அதேசமயம் பெண்கள் பிரிவில் கோல் சிலாங்கூர் வாகிசர் தமிழ்ப் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது.
நேற்று சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 101 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்றன.
பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு கோலசிலாங்கூரைச் சேர்ந்த பெஸ்தாரி ஜெயா மற்றும் வாகிசர் தமிழ்ப்பள்ளி தேர்வு பெற்றன.
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில் ஐந்து பெனால்டிகள் வழங்கப்பட்ட வேளையில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற வாகிசர் தமிழ்ப்பள்ளி ரவிந்திரன் கிண்ணத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத் தையும் வென்றது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளிக்கு 1,500 வெள்ளி ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் பிரிவில் 3 ஆவது இடத்தை பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியும் 4 ஆவது இடத்தை கோல்ட் ஃபீல்ட் தமிழ்ப் பள்ளியும் பிடித்தன.
ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு பூச்சோங் 14 ஆவது தமிழ்ப் பள்ளியும் பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியும் தேர்வு பெற்றன.
இதில் பூச்சோங் 14 தமிழ்ப் பள்ளி 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியை வீழ்த்தி நமச்சிவாயம் கிண்ணத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத்தையும் வென்றது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பத்து ஆராங் தமிழ்ப் பள்ளிக்கு கிண்ணமும் 1,500 வெள்ளியும் வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளி மற்றும் நான்காவது இடத்தை பத்து கேவ்ஸ் தமிழ்ப் பள்ளி பிடித்தன.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணை தலைவர் குணா, கென்னத் கண்ணா, செயலாளர் குணா, பொருளாளர் இராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து 20 ஆம் ஆண்டாக நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மலேசிய கால்பந்து சங்கம், சிலாங்கூர் கால்பந்து சங்கம், சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் ஆதரவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

