
ஷா ஆலம், ஜூலை 30 இந்நாட்டில் மூன்றாம் தரப் பிரஜைகள், இரண்டாம் தரப் பிரஜைகள் என்று யாரும் இல்லை எனக் கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அனைவரும் சமமே என உறுதிபடத் தெரிவித்தார்.
அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதி செய்வதும் அந்த உரிமையை மீட்டுத் தருவதும் மாநில அரசின் நடப்பு தலைமைத்துவத்தின் கடமையாகும் என்றும் அவர் சொன்னார்
உரிமைகளை உறுதி செய்வதில் சரும நிறம், அரசியல் சித்தாந்தம், சமய வேறுபாடு மற்றும் இதர வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப் படாது.இதுதான் மாநில அரசின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.
மைசெல் பிரிவின் ஏற்பாட்டில் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அடையாள ஆவணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மாநில மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளையும் மாநில அரசின் திட்டங்களின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும் பெறுவதிலிருந்து விடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடந்த 2008ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செல் அமைப்பை மாநில அரசு நிறுவியதாக அவர் சொன்னார்.
அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் பல சிக்கலை எதிர் நோக்குவதற்கு குடும்பச் சிக்கல்கள், அறியாமை மற்றும் மலாய் மொழியில் திறன் பெற்றிராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

