

ஈப்போ, ஆக. 11: தற்போது வங்காளதேச நாட்டில் உள்ளூர் அரசியல் பிரச்சினை உருவாகி விட்டது. இந்த பிரச்சினையில் அந்நாட்டு இந்துகளையும், அங்குள்ள இந்து ஆலயங்களிலும் வன்முறை கலாச்சாரம் தூண்டப்பட்டு வருகிறது. மடானி அரசாங்கம் அங்குள்ள இந்துகள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை மனுவை அந்நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்களிடம் முன்வைக்கும்படி, இங்குள்ள தேசிய ஆசிரியர் பயிற்சி கழகத்தில் நடைபெற்ற 46 வது திருமுறை ஓதும்போட்டியில் கலந்துக்கொண்டபோது மலேசிய தேசிய இந்து சங்கத்தின் தேசிய பேரவை தலைவர் தங்க. கணேசன் கூறினார்.
தற்போது பூக்குளியல் என்ற பெயரில் இந்நாட்டு இந்திய பெண்களை ஒரு தரப்பினர் சீரழித்து வருகின்றனர். மாந்திரீக அடிப்படையில் இந்திய பெண்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மாந்திரீகம் செய்யும் தரப்பினர் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஆகையால், குறிப்பாக திருமணமான இளம் பெண்கள் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, இவ்விவகாரத்தில் இந்திய மகளிர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.
இன்றைய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய கல்வி நடைபெற அனுமதி வழங்க வேண்டும். அத்துடன் இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி பாடங்களை கற்பதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை மனு வைத்தார்.
இந்து பெற்றோர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் ஆலயம் செல்வதற்கு முற்பட வேண்டும். அத்துடன் இந்திய மக்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்பள்ளிகளுக்கு அனுப்புவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால் இந்து சமய வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு பேராக் மாநிலத்தில் 2816 மாணவர்கள் திருமுறை ஓதும் விழாவில் பங்கு பெற்றனர். அவற்றில் 787 போட்டியாளர்கள் மாநில அளவில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் அடுத்த மாதம் 16 ல், தேசிய அளவில் கோலாலம்பூரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் போட்டியிடவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டா்.
இந்த திருமுறை போட்டி நாடு முழுவதுமுள்ள 9 மாநிலங்களில் சிறப்பாக நடைபெற மடானி அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இவ்வேளையில் தேசிய இந்து சங்க பேரவையின் சார்பாக நன்றியை தங்க கணேசன் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில், போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
வெற்றியாளர்களுக்கு மலேசிய தேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன் பரிசுகள் எடுத்து வழங்கினார்.

