

வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 15ஆவது பொதுத்தேர்தலில் பாங்கி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஷரேட்சன் ஜோஹான் வலியுறுத்தினார்.
ஜனநாயக உரிமையான வாக்களிப்பை அனைத்து வாக்காளர்களும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.
அதோடு பாங்கி தொகுதியில் பக்காத்தான் வேட்பாளராக நான் களமிறங்கியுள்ளேன்.
இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஓங் கியான் மிங் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டிருப்பதால் நான் வேட்பாளராக களமிறங்குகிறேன்.
ஒருவேளை இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் பாங்கி தொகுதியை ஒரு வளமானத் தொகுதியாக உருமாற்றுவேன் என்று அவர் நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான ஹீ லொய் சியான், சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மாஸ்வான் ஜோஹார், காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பாலமுரளி, தியாகராஜன், சங்கீதா, கிராமத் தலைவர்கள் ராஜ்குமார், கிறிஸ்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

