
மாரன் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய புதிய நிர்வாகத்தின் அனுமதியின்றி எடுத்து சென்ற பொருட்களை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் பெங்தோங் தொகுதி மஇகா தலைவரும், ஆலய முன்னாள் செயலாளர் ஜெயேந்திரன் ஜெயராமனுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசை நடப்பு தலைவர் ராமன் பழனியப்பன் தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ளார்.
கடந்த 19 ஜூலை, ஆலயத்தில் இருந்து முக்கிய பத்திரங்கள் மற்றும் பணம் களவாடிய சம்பவத்தில் ஜெயேந்திரன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் சசிதரன் சங்கரன் மற்றும் ரவி வடிவேலு மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெயேந்திரன்,சசிதரன் மற்றும் ரவி மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் ஒரு நாள் நீதிமன்ற தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தற்பொழுது மேல் நடவடிக்கைக்கு கொண்டு செல்ல உள்ளது.
இதற்கிடையில், கோவிலில் எடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பணத்தை ஒப்படைக்குமாறு ஜெயேந்திரனை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், அவர் ஒப்படைக்க மறுத்துவிட்டார். எனவே, கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி, ஆலயத்தில் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களையும் உடனடியாக ஒப்படைக்குமாறு ஜெயேந்திரன் உள்ளிட்ட 6 பேருக்கு, தற்போதைய தலைவர் ராமன் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பினார்.

