
ஷா ஆலம், செப். 16- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள அபாயம் உள்ள
இடங்களில் ஒன்றாக விளங்கும் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ
மூடாவில் பல்வேறு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த
திட்டங்களின் மேம்பாட்டை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.பிரகாஷ் அணுக்கமாக கண்காணித்து வருகிறார்.
பருவமழையின் காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக்
கருத்தில் கொண்டு இந்த வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட
காலத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதில் அவர் தீவிரமாக
செய்ல்பட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் இங்குள்ள பெர்சியாரான் புடிமான் 25/35 மற்றும் 25/39
சாலைகளில் ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைத்துள்ள வெள்ள நீர்
இறைப்பு பம்ப் இயந்திரங்களின் நிர்மாணிப்புப் பணிகளை பிரகாஷ் நேற்று
பார்வையிட்டார்.
ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜனும்
அப்போது உடனிருந்தார்.

