கோல குபு பாரு தொகுதிக்கு வெ.80,000 மதிப்பில் 400 தீபாவளி பற்றுச் சீட்டுகள் ஒதுக்கீடு!


ஷா ஆலம், அக். 22- இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஜோம்
ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்க கோல குபு பாரு தொகுதிக்கு 80,000
வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையைக் கொண்டு வசதி குறைந்த 400 குடும்பங்களுக்கு தலா
200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தா கூறினார்.

லெம்பா பிரிங்கின், கெர்லிங், கோல குபு பாரு, அம்பாங் பெச்சா, ராசா
மற்றும் பத்தாங் காலி உள்பட இத்தொகுதியைச் சேர்ந்த வசதி
குறைந்தவர்கள் இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர் என்று
அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் நேற்று பத்தாங் காலியிலுள்ள
எக்கோன்சேவ் பேரங்காடியில் பெருநாளுக்குத் தேவையான
அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்குரிய
வாய்ப்பினை வசதி குறைந்தவர்களும் பெற வேண்டும் எனும் உயரிய
நோக்கில் மாநில அரசு இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தை
அமல்படுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

மாநில அரசின் இந்த உதவி சம்பந்தப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரச்
சுமையை ஓரளவு குறைக்க உதவும் அதேவேளையில் பெருநாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தும் எனத்
தாம் நம்புவதாக பாங் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles