
எதிர்வரும் நவம்பர் 30 அன்று, கோலாலம்பூர், மாரியம்மன் மண்டபத்தில் உரிமை ஓராண்டு நிறைவுவிழாவை கொண்டாடவுள்ளது.
அரசியல் கட்சியாக பதிவுபெறும் முயற்சிகள் தொடர்ந்து மறுக்கப்படும் சூழலில், உரிமைகள் மறுக்கப்பட்ட மலேசியர்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த இந்திய சமுதாயத்தின் சமூகநீதிக்காகவும், சம உரிமைகளுக்காக போராடும் வெகுமக்கள் இயக்கமாக உரிமை உருவாகியுள்ளது.
ஒராண்டுக்கு முன்பு, உரிமை என்ற அரசியல் கட்சியை பதிவுபெற விண்ணப்பித்து, பதிவு மறுக்கப்பட்டு, நமது மேல்முறையீட்டுக்கான பதில் இல்லாமல் இன்னும் உள்துறை அமைச்சரால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறோம்.
நாட்டின் அரசியல்மைப்பு சட்டம், அரசியல் இயக்கமாக பதிவுபெற நமக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட நாம், நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்.
உரிமையின் பயணம் எதிர்ப்பாற்றல் மிக்கதாக உள்ளது. கடந்த ஒராண்டில், மலேசியாவில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, அரசியல் அடையாளம் மறுக்கப்பட்ட இந்திய சமுதாயத்தினரோடு அனுக்கமான உறவை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இந்திய சமுதாயத்தின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு வலுவான மக்கள் இயக்கமாக நாம் வளர்ந்துள்ளோம்.
நாட்டில் நடந்து முடிந்த கோலாகுபுபாரு, சுங்கை பாக்காப் மற்றும் மாக்கோத்தா ஆகிய இடைத்தேர்தலகளில் நமது இயக்கத்தின் தாக்கம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
அரசியல் கட்சியாக பதிவு பெற நாம் நீதிமன்றத்தை நாடியுள்ள இவ்வேளையில், சமத்துவம் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் நாம் ஒருபொழுதும் துவண்டு விடப்போவதில்லை. இன வேற்றுமைகளை கடந்து, பொருளாதார சவால்களை சந்திக்கும் சராசரி மலேசியர்களுடன் நாம் உடன் நிற்போம்.
இந்த ஓராண்டு காலத்தில், நமது சாதனைகளை மட்டும் அளவிடாமல், நாம் கடந்து வந்த பாதையில் கற்றுக்கொண்ட பாடங்களின் வழி, ஏற்றமிகு எதிர்காலத்துக்கு தயாராவோம்.
ப. இராமசாமி
தலைவர், உரிமை

