
செமினி, டிச.18
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வாரியக் குழுத் தலைவர் ஜோன்சன் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மேம்பாட்டு நிறுவனம் நிலம் ஒதுக்கியது. இதில் 1.07 ஏக்கர் நிலம் இன்னமும் மேம்பாட்டு நிறுவனத்தின் பெயரில் உள்ளது.
இந்த நிலத்தில் தற்போது பள்ளியின் திடல் உள்ளது. அத்திடலைத்தான் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் வெ.6,000,000க்கு வாங்கி கொள்ளுங்கள் என மேம்பாட்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட நிலத்தை பாதுகாக்கக் கோரி பள்ளி வாரியக் குழுவும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் அடிப்படையில்தான் இன்று பள்ளி விளையாட்டுப் போட்டிக்குச் சிறப்பு வருகை புரிந்த மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடுவின் சிறப்பு அதிகாரிகளிடம் இந்த விவகாரம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
மேலும் ஆட்சிக்குழு உறுப்பினரையும் சந்திக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் பள்ளிக்குப் பெரும் பயனாக இருக்கும் அந்நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாகும்.
அதற்கான முயற்சிகள் தொடரும் என்று ஜோன்சன் கூறினார்.

