
பினாங்கு டிச 21-
ஆகக் கடைசியாக தேங்காயின் விலையும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை தந்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தேங்காய் விலை கடுமையாக உயர்வு கண்டதை முன்னிட்டு
பினாங்கு சந்தைகளில் விற்கப்படும் தேங்காய்களின் விலையை தொட்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.
நடத்தப்பட்ட சந்தை ஆய்வில், தேங்காய்களின் விலை படிப்படியாக உயர்ந்து மவெ 2.00 லிருந்து மவெ 2.50 ஆக உயர்ந்து பெரிய அளவிலான தேங்காய்கள் ஒவ்வொன்றும் மவெ 3.30ஐ எட்டியிருந்ததை காட்டியதாக அவர் சொன்னார்.
தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, தேங்காய்ப்பாலின் விலையை அதிகரிக்க செய்துள்ளது.
ஒரு கிலோகிராம் தேங்காய் பாலின் விலை மவெ 12.00 லிருந்து மவெ 14.00 மற்றும் மவெ15.00 வரை உயர்வு கண்டு, விற்கப்படுவதாக அவர் கூறினார்.
துருவிய தேங்காயின் விலை மவெ 8.00 லிருந்து மவெ 11 ஆக அதிகரித்துள்ளது.
இனி நமது உணவங்களில் தேங்காய் சட்டினி கிடைக்குமா என்பது கேள்விகுறிதான்.
பிற நாடுகளிலி ருந்து தேங்காயின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இப்பிரச்னை தொடங்கியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பல மளிகைக் கடைகளும் பொதுச் சந்தைகளும் கடந்த இரண்டு வாரங்களாக பொருட்களைப் பாதுகாக்க போராடி வருவதாகவும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற கவலையை தெரிவித்தனர்.
விலை உயர்வு நியாயமானதா என்பதைத் தீர்மானிக்க, விலை உயர்வு மற்றும் விநியோகப் பற்றாக்குறை குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

