
சுங்கைபட்டாணி, பிப் 7-
பெரும் அளவில் திரளும் சுங்கைபட்டாணி தைப்பூசத்தில் தங்கள் காணிக்கையினை செலுத்தும் இரத காவடிகளை இழுத்து வரும் பக்தர்கள், தங்களது இரதக் காவடிகளுக்கு பின்னால் ஒலி பெருக்கிகளை சுமந்து வரும் லாரிகளுக்கு ஆலய வளாகத்தில் நுழைவதற்கு தேவஸ்தானம் தடை செய்துள்ளது.
நேற்று முன் தினம் கோலமூடா மாவட்ட காவல் துறையில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, மாலையில் இந்து பணிப்படையினருடன் ஆலயத்தில் நிகழ்ந்த சந்திப்பிலும் தேவஸ்தானம் தீர்க்கமாக இந்த முடிவினை எடுத்துள்ளது.
அதோடு முகமூடிகளை அணிந்து வருவது, விசில் சத்தத்தை எழுப்புவது, பட்டாசுகள் வெடிப்பது போன்ற சம்பவங்களை அவசியம் தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்துயுள்ளது.
அதோடு வியாபாரிகள், நகராண்மைக்கழகம் வரையறுத்துள்ள பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். அனுமதி இல்லாமல் விற்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட தவறுகளைப் புரிந்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தால் தேவஸ்தானம் நிர்வாகம் பொறுப்பேற்காது என அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் தெரிவித்தார்.
காவல் துறை, இந்து பணிப்படையினர், ரேலா உறுப்பினர்கள் தாங்கள் வரையறுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என அவர் மேலும் சொன்னார்.

