
ஷா ஆலம், ஏப். 21- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா மற்றும் அதன்
சுற்றுவட்டார மக்கள் எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு
கண்பதற்கு தாமும் அரசாங்கமும் எந்த முனைப்பும் காட்டவில்லை
என்றத் தோற்றத்தை ஏற்படுத்த முயலும் தரப்பினரை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கடுமையாகச் சாடினார்.
மக்களின் நலன் காக்கும் முயற்சியிலிருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கப்
போவதில்லை என அவர் சூளுரைத்தார்.
எனது குரல் மக்களின் குரல், இது வெறும் கோஷமல்ல. நான் மக்களுடன்
எப்போதும் கரம் கோர்த்து நிற்பேன். அதே சமயம், மக்களுக்கான எனது
போராட்டத்தையும் முயற்சிகளையும் அவதூறுகள் மூலம் கீழறுப்பு செய்ய
முயன்றால் நான் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்று
அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி மந்திரி
புசாரை வலியுறுத்தும் வகையில் இங்குள்ள மைடின் பேரங்காடிக்கு
அருகே நேற்று நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு வருகை புரிந்தப்
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் நலனில் எனக்குள்ள அக்கறையை களத்தில் இறங்கி நிலைமையை
நேரில் கண்டறிவது, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவது
போன்ற பணிகள் மூலம் நான் நிரூபித்துள்ளேன். எனது குரல்
தொலைவிலிருந்து ஒலிக்கும் வெற்றுக் கோஷமல்ல என அவர்
உறுதியான குரலில் கூறினார்.
வெள்ளப் பிரச்சனை என்பது கட்சி சார்ந்த விஷயமல்ல. அது கொள்கை
சார்ந்த விஷயம். நான் மக்களின் நலனுக்காக அவர்களுடன் எப்போதும் ஒன்றிணைந்து நிற்பேன். மக்களின் குரல் மதிக்கப்பட வேண்டும்,
செவிமடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இதனை நான் செய்கிறேனே
தவிர பாராட்டுகளை எதிர்பார்த்து அல்ல என்றார் அவர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிரகாஷ் ஸ்ரீ மூடா மற்றும் அதன்
சுற்று வட்டாரங்களில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
காணப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை தக்க
ஆதாரங்களுடன் விலாவாரியாக எடுத்துரைத்தார்.
thanks – selangor kini