
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சுற்றுலாப் புல்வெளியான பைசரானில் பாதுகாப்புப் படைகள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதை தொடர்ந்து எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்த கேள்வியை எழுப்பியது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். பைசரான் பகுதியில் அவ்வளவு சுற்றுலா பயணிகள் கூடியிருந்த இடத்தில் ஏன் ஒரு ராணுவ வீரர் கூட ஆயுதம் ஏந்திய நிலையில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படவில்லை என்று அவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசிடம் இருந்து உரிய பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதே கேள்வியை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் எழுப்பினர். இதற்கு ஒன்றிய அரசின் தரப்பில், ‘இந்தப் பகுதி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரைக்காக திறக்கப்படும்; அமர்நாத் யாத்ரீகர்கள் இங்கு ஓய்வு எடுப்பார்கள்.
ஆனால், இந்த முறை உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ஏப். 20ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்துள்ளன. இந்த தகவலை உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை; இதனால், பாதுகாப்பு படைகள் அங்கு பயன்படுத்தப்படவில்லை.
பொதுவாக, ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு படைகள் நிறுத்தப்படுவது வழக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டது. பஹல்காமில் நடந்த தாக்குதல் சம்பவம் உளவுத்துறை தோல்வியா? இல்லையா?, அல்லது பாதுகாப்பு குறைபாடா? இல்லையா? என்று அடுத்து கேட்டனர். இதற்கு ஒன்றிய அரசு தரப்பில், இந்தத் தாக்குதல் எந்த சூழலில் நடந்தது என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக பதிலளிக்கப்பட்டது.