


கோலாலம்பூர் ஏப்ரல் 27-
தோட்ட பாட்டாளி மகனாகப் பிறந்து தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு தொண்டாற்றியவர் கல்வியாளர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.
நாட்டில் புகழ்பெற்ற கல்வியாளராக வலம் வந்த நாராயணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று பிரிக்பீல்ட்ஸ் இந்திய தூதரகத்தின் கலை கலாச்சாரம் மையத்தில் நடைபெற்றது.
மலேசிய தமிழ் அறவாரியம், கோலகிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், உமா பதிப்பகம், கோபியோ ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் ராஜேஷ், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மற்றும் ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ ஆகியோர் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டனர்.
தமிழ் காப்பகத்தின் துணை தலைவர் டாக்டர் செல்வஜோதி ராமலிங்கம், மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சுப்பிரமணியம்ராகவன், கோபியோ செயலாளர் ரவீந்திரன், கோல் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் பூவரசன், இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கல்வியாளர் நாராயணசாமி அவர்களின் தமிழ் தொண்டு சேவையை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.
தமிழோடு வாழ்ந்து தொண்டாற்றிய இவரின் சேவைகள் எப்போதும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் என்று அவர்கள் புகழாரம் சூட்டினர்.
அரசாங்க ஊழியராக இருந்தாலும் துணிச்சலாக பல போராட்டங்களில் பங்கேற்றவர் என்று குணசேகரன் கந்தசாமி தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
இவரின் ஈடற்ற சமூக பணிகள் போற்றுதலுக்குரியது. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் என்றும் நம்மோடு இணைந்திருப்பார் என்று சார்லஸ் சந்தியாகோ தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்வில் நல்லாசிரியர் நாராயணசாமி நினைவாக மலர் வெளியிடப்பட்டது .