
மலேசிய இந்தியர் காங்கிரஸின் (ம.இ.கா) கல்விப் பிரிவான MIED வழங்கும் கல்விக் கடனுதவிக்கான நேர்முகத் தேர்வு நேற்று கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை இணையம் (Zoom) வழியாக விண்ணப்பித்த 181 மாணவர்களில் தகுதி பெற்ற 92 மாணவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களுடன் 50 பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர்.
பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த இந்த மாணவர்கள் மருத்துவம், சட்டத்துறை, பல் மருத்துவம், ஏவியேஷன் உட்பட 10-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
MIED அறங்காவலர்களான டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன், டட்டின் படுக்கா கோமளாதேவி மற்றும் உஷாநந்தினி ஆகியோர் இந்த முக்கியமான நேர்முகத் தேர்வை நடத்தினர்.
MIED கல்விக்கடன் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தங்களது மேற்படிப்பு காலம் முழுவதும் அதிகபட்சமாக தலா 50,000 ரிங்கிட் வரை கல்வி உதவித்தொகை பெற முடியும். மாணவர்களின் கல்வித் தகுதி, பெற்றோரின் பொருளாதார நிலை, அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்பு, மேற்படிப்புக் காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கடனுதவி வழங்கப்படும்.

