
பெர்சத்து கட்சி தனது வழிநடத்தலை இழந்து, எதிர்காலத்தை அச்சுறுத்தும் பாதையில் பயணிக்கிறது என்று அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஸ்தஃபா யாக்கொப் சாடினார்.
பாஸ் கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பெர்சத்து கட்சி அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கட்சியை கலைத்து, அதன் உறுப்பினர்கள் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இப்போது பெர்சத்துக்கும் அம்னோவுக்கும் இடையில் எந்தவொரு அரசியல் ஒத்துழைப்பும் இல்லை. இதை நினைவில் கொண்டு, பெர்சத்து உறுப்பினர்கள் தங்களது அடையாளத்திற்கான சரியான முடிவை எடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சி போன்ற பலவீனமான கூட்டாளிகளுடன் தொடர்ந்து செயல்படுவதால், பெர்சத்து கட்சி தனது அரசியல் நிலையை மேலும் பாதிக்கவுள்ளதாக அவர் எச்சரித்தார்.
“நாட்டின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் தேவையானது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு வலுவான அம்னோ. இதற்காக அனைவரும் திரும்பி வரவேண்டும்” என முஸ்தஃபா யாக்கொப் தனது முடிவுரை கூறினார்.

