
ஈப்போ, ஜூன் 11- கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கிரிக், தாசேக் பண்டிங் அருகே 15 உயிர்களைப் பலிகொண்ட விபத்து தொடர்பில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த 39 வயது ஓட்டுநரின் அத்தகைய நடவடிக்கைகள், காவல்துறையால் நடத்தப்படும் விசாரணைக்கு இடையூறாக அமையக்கூடும் என்று பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.
ஓட்டுநரின் அந்நடவடிக்கை பொதுமக்களிடையே பல்வேறு ஊகங்களை எழுப்பக்கூடும். மேலும், இதன் தொடர்பில் நடத்தப்படும் விசாரணை பல்வேறு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
இந்த நாடு பேச்சு சுதந்திரத்தை அனுமதித்தாலும், தனது சார்பாக அறிக்கையை அளிப்பதற்கான தருணம் வரும் வரை பொறுமையாக இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று பேராக் போலீஸ் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியப் பிறகு ஓட்டுநரிடம் போலீசார் வாக்குமூலம் பெறுவார்கள் என்று நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.
bernama

