
கோலாலம்பூர்: ஜூலை 23-
சர்ச்சைக்குரிய ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீதான நடவடிக்கைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லாதது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே என்று
மஹிமா தலைவர் டத்தோ கண்ணா சிவக்குமார் சாடினார்.
பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் அளித்த பதிலில் வருத்தமும் அதிருப்தியும் அடைந்துள்ளேன்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது சர்ச்சைக்குரிய ஜம்ரி வினோத், ஃபிர்டாப்ஸ் வோங் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை, சட்ட நடவடிக்கை தொடர முடியாது.
காரணம் அவர்கள் இருவரிடமும் குற்றம் சாட்டப்பட வேண்டிய எந்தவொரு குற்றத்தின் கூறுகளையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.
அமைச்சரின் கூற்றுப்படி அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஏஜிசி கூறிவிட்டதாக தெரிவித்தார்.
இனவெறி, பிற மதங்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள். இந்த பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது என்று அவர் சொன்னார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் இருவரும் 3 ஆர் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் சொன்னார்.

