
கோலாலம்பூர் ஆக 7-
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரான தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபூ பக்கர், அரசுப் பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தும் முன்மொழிவை அறிவித்ததற்கு பிபிபி இளையோர் அணி கடுமையான எதிர்ப்பையும், ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்கிறது என்று பிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
பெரியவர்களாகும் மக்கள் எண்ணிக்கையின் கூடுதல் மற்றும் மக்கள் தொகை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுத்துள்ள நோக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால் இளைய தலைமுறையினருக்கும், ஏற்கனவே நெருக்கடியான வேலை வாய்ப்பு சந்தைக்கும் ஏற்படுத்தும் உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகளுக்கும் சமமான அல்லது அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஓய்வு வயதை நீட்டிப்பது, வேலை வாய்ப்புகளுக்காக ஏற்கனவே போராடி கொண்டிருக்கும் இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கு பெரும் தடையாக அமையக்கூடும்.
இது அரசுத் துறையில் பணி நிர்வாகத்தின் வளர்ச்சியையும், புதுமை முயற்சிகளையும் தடுக்கக்கூடிய சிக்கலான சூழ்நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இந்தக் கொள்கை முன்மொழிவின் நேரத்தையும் திசையையும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
இளைஞர்களை வேலைவாய்ப்பு, தொழில் முனைவு திட்டங்கள் மற்றும் திறன்மிக்க பணிக்குழுவாக உருவாக்குவது போன்ற முயற்சிகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், இச்செயல் எதிர்கால மலேசியாவை உருவாக்கப் போகும் இளம் தலைமுறையை புறக்கணிப்பதாகத் தெரிகிறது.
எனவே பிபிபி இளையோர் அணி, மலேசியா அரசாங்கத்தையும், அரசுப் பணிப்பாளர் துறையையும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது:
இளைஞர்களின் கருத்தையும் உட்படுத்தும் திறந்த மற்றும் வெளிப்படையான ஆலோசனை நடைமுறையை மேற்கொள்வதற்குள், ஓய்வு வயதை உயர்த்தும் முன்மொழிவை உடனடியாக நிறுத்தவேண்டும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு நிலவரம், குறைவான வேலை வாய்ப்பு மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு தரவுகளை உள்ளடக்கிய முழுமையான தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் முழுநேரப் பணியை நீட்டிப்பதற்குப் பதிலாக, ஓய்வுக்குப் பிந்தைய கலந்தாய்வு பணிகள், மாற்று வேலை ஒப்பந்தங்கள் அல்லது படிப்படியான ஓய்வு திட்டங்கள் போன்ற விருப்ப வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மலேசிய இளைஞர்கள் தேசியக் கொள்கைமுறைகளில் புறக்கணிக்கப் படக்கூடாது என்பதையே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இளையோர் வாய்ப்புகளைத் தடுக்கின்ற எந்த நடவடிக்கையும் தலைமுறைக்கிடையிலான சமத்துவத்தையும், நாட்டின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும்.
மலேசியா திட்டம் 13 இல் உள்ள சமூக நீதி மற்றும் இளையோர் மேம்பாட்டின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பொறுப்பை பிரதமர் டத்தோஸ்ரீ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று அவர் சொன்னார்.

