
ஷா ஆலம், பிப் 12-
நாட்டில் தற்போது சட்டவிரோத வழிபாட்டு தல விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு பெறாத பல இந்து ஆலயங்கள் உடைபடும் அபாயத்தை எதிர் நோக்கி உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாகத் தோட்டப்புறங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தீடிரென சட்டவிரோதமானவை என்று முத்திரை குத்தப்படுவது பெரும் வேதனையை அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்பக் காலத்திலும், ரப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்களில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்களின் ஆன்மீகத் தேவைகளுக்காகத் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த ஆலயங்கள் கட்டப்பட்டன.
அக்காலகட்டத்தில் நில ஆவணங்கள் முறைப்படுத்தப்படாத நிலையில், பின்னாளில் அத்தோட்டங்கள் விற்கப்படும்போது இந்த ஆலயங்கள் இப்போது பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்றும் அதே நேரத்தில் முறையாக மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்.
மேலும் இனங்கள் இடையே மனக்கசப்பு மற்றும் விரோதம் ஏற்படாத வண்ணம் இந்த விவாகரத்துக்கு சுமுகமான மற்றும் அமைதியான முறையில் சிலாங்கூர் மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில அரசு இந்து ஆலயங்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வருவது மகிழ்ச்சி அளித்தாலும் பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கும் ஆலயங்களை மதிப்பாய்வு செய்து அதற்கு ஏற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

