
ஷா ஆலாம், ஏப்ரல் 2: ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணம் உயரவிருப்பதாகப் பரவும் தகவலை தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மறுத்துள்ளது.
மாறாக, தற்போது செய்யப்படும் எந்தவொரு மின்கட்டண செலவு சரிசெய்தலும், ஜூலை 2025 முதல் எரிசக்தித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் தானியங்கி எரிபொருள் செலவு சரிசெய்தல் பொறிமுறைக்கு (AFA) உட்பட்டது என்று டிஎன்பி இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தகவல் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் ஆற்றல் கொண்டது எனக் கூறிய டிஎன்பி, இந்தத் தவறான தகவலைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) புகார் அளிக்கப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
“உலகளாவிய எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்நியச் செலாவணி விகிதங்களின் அடிப்படையில் AFA விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இது எரிசக்தி ஆணையத்தின் (ST) ஒப்புதலுடன் மாதந்தோறும் சரிசெய்யப்படுகிறது,” என பெரித்தா ஹரியான் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“AFA விகிதம் தொடர்பான எந்த மாற்றங்களும் டிஎன்பி-யின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும். மேலும், நுகர்வோர் துல்லியமான மற்றும் வெளிப்படையான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அந்த அறிக்கை கூறியது.
இதற்கிடையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், டிஎன்பி-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களை அது அறிவுறுத்தியுள்ளது.
“குழப்பத்தைத் தவிர்க்க, எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
“கேள்விகள் அல்லது சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருந்தால், TNB Careline பேஸ்புக், @Tenaga_Nasional X தளம் அல்லது CareLine@myTNB.my மின்னஞ்சல் வழியாக நேரடியாகத் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்,” என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

