மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் ‘தர்ம மடானி’ திட்டம்; ஆலயங்கள் வழி சமூக மறுமலர்ச்சியை கொண்டு வரும்! -ரவீந்திரன் நாயர்

கோலாலம்பூர், ஏப்ரல் 27 –
இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் மையங்களாகவும் திகழ வேண்டும்.

இந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ‘தர்ம மடானி’ (Dharma MADANI) எனும் நிதியுதவித் திட்டத்தை மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மித்ராவின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர், இத்திட்டமானது வெறும் நிதிப் பங்கீடு மட்டுமல்ல; மாறாக இந்தியச் சமூகத்தின் அடித்தளத்தை அடிமட்ட அளவில் பலப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய முதலீடு என்று விளக்கினார்.

“இந்தியச் சமூகத்தின் உயிர்நாடியே ஆலயங்கள்தான். அங்கிருந்துதான் நற்பண்புகள், ஒற்றுமை மற்றும் கூரிய சிந்தனை பிறக்கின்றன. எனவே, ஆலய நிர்வாகங்கள் நமது இளம் தலைமுறையினருக்கு ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் கல்வியைப் புகட்டும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, தேவார வகுப்புகள், பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் கபடி போன்ற கலைப் பயிற்சிகளுடன், மாணவர்களுக்கான கூடுதல் கல்வி போதனை வகுப்புகள் மற்றும் தலைமைத்துவ முகாம்களை நடத்தும் மையங்களாக ஆலயங்கள் உருமாற வேண்டும்,” என அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.

மேலும், இந்த நிதியானது ஆலயங்களின் கட்டிட வளர்ச்சி அல்லது உள்கட்டமைப்பு பணிகளுக்கானது அல்ல என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மாறாக, ஆன்மீக மற்றும் சமூக மேம்பாடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் கல்வி ஆதரவு ஆகியவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த அணுகுமுறையானது, ஆலயங்களைச் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் புகலிடங்களாக மாற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திட்டத்தின் தற்போதைய நிலை:

நாடு முழுவதும் உள்ள 1,000 இந்து ஆலயங்கள் பயனடையும் வகையில் மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு ஆலயத்திற்கும் 20,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே முதற்கட்டமாக 155 ஆலயங்களுக்கு RM3.1 மில்லியன் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வு நாளை ஏப்ரல் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெறும்.

இதில் மேலும் 300 ஆலயங்களுக்கு மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

நிர்வாக வெளிப்படைத்தன்மை:

நிர்வாகத் தூய்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், ‘தர்ம மடானி’ நிதியுதவி பெறும் ஆலயங்களின் பட்டியல் மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.mitra.gov.my) அவ்வப்போது பதிவேற்றப்படும். இதன் மூலம் ஒவ்வொரு காசும் தகுதியுடைய இலக்குகளுக்குச் சென்றடைவதை வெளிப்படைத்தன்மையுடன் உறுதி செய்ய முடியும்.

டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் தொலைநோக்கு தலைமை:

இதற்கிடையில், மித்ராவின் இந்த உருமாற்றப் பயணத்திற்குப் பின்னால் ஒரு பெரும் சக்தியாகத் திகழும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு ரவீந்திரன் நாயர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ‘மலேசியா மடானி’ கோட்பாட்டின் அடிப்படையில், மித்ராவை மிகவும் வெளிப்படையான, துரிதமாகச் செயல்படும் மற்றும் இந்தியச் சமூகத்தின் உண்மையான தேவைகளில் கவனம் செலுத்தும் ஓர் அமைப்பாக டத்தோஸ்ரீ ரமணன் மாற்றியமைத்துள்ளார்.

“நிர்வாகச் சிக்கல்களைக் களைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி அவர் எடுத்து வரும் துணிச்சலான முடிவுகள் மித்ராவை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

அவர் ஒரு அமைச்சராக மட்டுமன்றி, சமூகத்திற்குத் தேவையான உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு ‘மாற்றத்தின் நாயகனாக’ விளங்குகிறார்,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

டத்தோஸ்ரீ ரமணனின் இந்தத் தொலைநோக்குத் தலைமைத்துவத்தின் கீழ், இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் மேலும் தொடரும் என்றும், இது அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வலிமையான எதிர்காலத்திற்குப் புதிய பாதையை அமைக்கும் என்றும் ரவீந்திரன் நாயர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles