
கோலாலம்பூர் மே 6-
அதிகரித்து வரும் செலவுகளால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் தொடர்புடைய நிறுவனங்களும், தங்கள் வணிக வளாக வாடகை விகிதங்களைக் குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்த மாதம் உடனடியாக, மஜ்லிஸ் அமனா ராக்யாட் (மாரா), ஊடா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (ஊடா) போன்ற அனைத்து தொடர்புடைய நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகராட்சியின் (டி.பி.கே.எல்) முந்தைய வாடகைக் குறைப்பு நடவடிக்கையை இந்த முன்முயற்சி பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் நேர்மறையான பதிலை வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் வாடகைக் குறைப்பை அறிவிக்கும் என்றும் அவர் சொன்னார்.
“இந்த முன்முயற்சி டி.பி.கே.எல்-இன் வாடகை விகிதங்களைக் குறைக்கும் நடவடிக்கையைப் பின்பற்றுவதாகும். இந்த மாதம் முதல் வாடகை விகிதங்களைக் குறைக்க, அனைத்து உள்ளூர் அதிகாரிகள், மாநிலங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

