
ஷா ஆலம், மே 8- பள்ளி மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக பலப்படுத்த வேண்டும் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வீராமன் வலியுறுத்தியுள்ளார்.
மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“பள்ளி வளாகம் என்பது பிள்ளைகள் கல்வி பயிலும் மிக பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டுமே தவிர, சாலைப் பயனாளிகளின் அலட்சியத்தால் உயிரைப் பறிக்கும் இடமாக மாறக்கூடாது,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
சாலை விதிகளை மதிக்காமல் அவசர நிலையில் வாகனங்களைச் செலுத்துவது இத்தகைய துயரங்களுக்குக் காரணமாக அமைகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பள்ளிப் பகுதிகளில் அபாயகரமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

