

கோலாலம்பூர் ஆக 24-
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 – விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி துல்லியமாக நேற்று தரையிறங்கியது.
இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியிருப்பது பெருமிதம் தந்துள்ளது.
சந்திரயான் 1, 2, 3 கட்ட திட்டங்களுக்கு இயக்குனர்களாக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, வனிதா, வீரமுத்துவேல் ஆகிய தமிழர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4ஆவது நாடாக இந்தியா உருவாகி உள்ளது.
எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
நிலவில் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் பகுதியை தேர்வு செய்து வெற்றிகரமாக இறங்கிய விக்ரம் லேண்டரால் விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.
சந்திரயான்-3 வெற்றி – உலகையே
வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர்களுட நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

