
சுங்கை,அக்31
ஆசிரியர்களால் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பண்புநலன்களும் நன்னெறி ஒழுக்கங்களும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அதேவேளையில் அவற்றை தங்களின் வாழ்வியல் நெறியாக ஒவ்வொரு மாணவர்களும் கடைபிடிக்க வேண்டும் என சுங்கை குரூயிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தலைவர் சிவாலெனின் கூறினார்.
அதேவேளையில், மாணவர்கள் தங்களின் வாழ்வில் ஒழுக்கத்தையும் வாழ்வியல் நெறியையும் செழிமையுற கடைப்பிடித்தால் கல்வியில் மட்டுமின்றி வாழ்விலும் சிறந்த இலக்கை எட்டலாம் எனவும் பள்ளியில் நடைபெற்ற பண்புநலன் மற்றும் நன்னெறி ஒழுக்கவியல் நிகழ்வினை தொடக்கி வைத்து பேசுகையில் இதனை வலியுறுத்தினார்.

முன்னதாக தலைமையுரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மோகன் எவ்வளவுதான் கல்வியில் நாம் உயர்ந்து நின்றாலும் பொருளாதார நிலையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஒழுக்கமும் நன்னெறி பண்புகளும் இல்லையெனில் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.இச்சமுதாயம் நம்மை புறக்கணிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஐந்தில் வளையாதது,ஐம்பதில் வளையாது என்பர்.அதுபோல் மாணவர்கள் தங்களின் வாழ்வில் ஒழுக்கத்தையும் பண்புநலனையும் பேணி காக்காவிட்டால் வளர்ந்த பின்னர் அவர்கள் பெரும் சிக்கலையும் பாதிப்புகளையும் எதிர்நோக்ககூடும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
மேலும்,வள்ளுவர் சொல்வது போல் ஒழுக்கத்தை உயிரினும் உயர்வாக கருத வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவர் தூதர்களாக இருவரை பள்ளி சார்பில் நியமிக்கப்பட்ட நிலையில் பள்ளியின் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

