
கோலாலம்பூர் நவ 19-
சொக்சோ நிறுவனத்தின் சார்பில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தை இல்லத்தரசிகளுக்காக மனித வள அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுவரை இரண்டு லட்சம் இல்லத்தரசிகள் இந்த சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் தங்களை பதிந்து கொண்டுள்ளனர்.
இந்திய சமுதாயத்தை சேர்ந்த இல்லத்தரசிகளும் அதிக அளவில் இந்த திட்டத்தில் இணையும் படி மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாதத்திற்கு பத்து வெள்ளி வீதம் வருடத்திற்கு 120 வெள்ளி செலுத்த வேண்டும்.
தங்கள் மனைவிக்கு அவர்களின் கணவன்மார்கள் நேரடியாக 120 வெள்ளியை செலுத்தலாம்.
அல்லது வசதி குறைந்த இல்லத்தரசிகளுக்கு அரசு சார்பற்ற அமைப்புக்கள் செலுத்தலாம் என்று நேற்று டமான்சாரா காமன்வெல்த் கிளப்பில் நடைபெற்ற மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை தலைவர் டத்தோ காந்தராவ் தோட்டப்புறங்களைச் சேர்ந்த நூறு இல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்பு காப்புறுதி திட்டத்திற்காக மொத்த தொகையை அறக்கட்டளை ஏற்றுக் கொள்வதாக பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

