
ஈப்போ, டிச.29:
புந்தோங் தொகுதியில் மிக விரைவில் மாற்றுத் திறனாளி சேவை மையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக பேராக் மாநில அரசாங்கம் 30 ஆயிரம் ரிங்கிட் திதியுதவி வழங்குவதாக பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
ஒரு சீன கொடை வள்ளல் இந்த மாற்றுத்திறனாளி சேவை மையம் உருவாக்க தமது சொந்த நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளதாக இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஜெயகோபி தம்மிடம் இத்தகவலை தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்த சேவை மையம் வாடகை வீட்டில் தங்கள் சேவையை காலை மற்றும் மாலையில் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது சொந்த நிலம் கிடைத்துள்ளது; தொடர்ந்து புதிய கட்டுமானப் பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பணம் பற்றாக்குறை பிரச்சினையும் நிலவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மையத்தின் நிர்வாகத்தினர் நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக செயல்படவுள்ளதாக அ.சிவநேசன் சொன்னார்.
நான் பேராக் இந்திய மக்களின் சமூகநலப் பிரிவின் தலைவராக எந்தவொரு அரசியல் பாகுபாடுன்றி சேவையாற்றி வருகிறேன். ஆகையால், இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வாருங்கள் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அனைவருக்கும் அறைகூவல் விடுத்தார் அ.சிவநேசன்.

