
மஞ்சோங், ஜன.3:
இங்குள்ள டிண்டிங்ஸ் இந்தியர்கள் சங்கம் பல்லாண்டுகளாக இந்த மஞ்சோங் மாவட்ட இந்தியர்களின் மேம்பாட்டிற்கு உதவிகள் செய்து வந்துள்ளன. கடந்த பத்து வருடங்களாக இம்மாவட்ட இளைஞர்கள் கால்பந்து விளையாட்டுத்துறையில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படையில் பல திட்டங்கள் வரையறுக்கப்பட்டு இன்று தலைதூக்கி வருகிறது.
இம்மாவட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கால்பந்து துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று கால்பந்து பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாணவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் என்று இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் கூறினார்.
இச்சந்திப்பு நிகழ்வில் நாடாறிந்த தேசிய கால்பந்து விளையாட்டாளர் சி.நடராஜன் கலந்துக்கொண்டு பெற்றோர்களுக்கு இவ்விளையாட்டின் முக்கியதுவம் மற்றும் எதிர்காலம் குறித்து தெளிவான விளக்கமளித்தார். அவரின் உரை பெற்றோர்களுக்கு தன்முனைப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் மற்றொரு கால்பந்து விளையாட்டாளரான சுப்பிரமணியம் மாணவர்களை அணுகி அவர்களின் தேவையை கேட்டறிந்து, கால்பந்து துறையில் அவர்களின் கனவு குறித்து கேட்டறிந்தார். பின் மாணவர்கள் எவ்வாறு இத்துறையில் ஈடுபட வேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.
நிறைவு விழாவில், இந்த பயிற்சி பட்டறையில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

