
பத்துமலை, ஜன 16- பாலா இல்லம் சமூக நல இல்லத்தில் தங்கியிருக்கும் 40 இந்திய மாணவர்கள் பள்ளி சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தகப் பைகளை வாங்க பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் நேற்று 8,016 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தது. தைப்பொங்கலை முன்னிட்டு ஐயப்பன் கோவில் திருத்தலத்தில் நேற்று மகரஜோதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் சுவாமி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்த விழாவில் சிறப்பு அங்கமாக பாலா இல்லம் சமூக இல்லத்தை சேர்ந்த 40 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. பாலா இல்லம் சமூக நல இயக்கத்தின் பொறுப்பாளர்களிடம் 8,016 வெள்ளி காசோலையை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா ஆகியோர் நேரடியாக ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

